மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டு உலகத் தமிழ் மாநாடு நடத்துவது ஏமாற்று வேலை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.04.2025) விடுத்துள்ள அறிக்கை:

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டு உலகத் தமிழ் மாநாடு நடத்துவது ஏமாற்று வேலை என்பதால் புதுச்சேரி அரசின் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கண்டிக்கிறோம்.

1986ஆம் ஆண்டு முதல் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கலை, பண்பாட்டுத் துறை இந்நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாமலும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும் அந்நிறுவனத்தை மூடும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தில் புதுச்சேரி மாணவர்கள் பலர் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்து எம்.பில்., பி.எச்.டி., பட்டம் பெற்று உயர் பதவிகளில் உள்ளனர்.

மேலும், லாஸ்பேட்டையில் இந்நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தை வேறு துறைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர். இதனைக் கலை, பண்பாட்டுத் துறைச் செயலர் நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ்., தன்னிசையாக முடிவெடுத்து செய்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர் கலை, பண்பாட்டுத் துறை சீர்கெட்டுள்ளது.
தமிழ் அமைப்பினர் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதைக் கைவிட்டு, அதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென கோரியுள்ளனர்.

ஒருபுறம் உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, மறுபுறம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வித்திட்ட இந்நிறுவனத்தை மூடுவது கடும் கண்டனத்திற்குரியது. புதுச்சேரி அரசின் இந்த ஏமாற்று வேலையை தமிழாய்ந்த தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள்.

எனவே, புதுச்சேரி அரசு மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர்களை உடனே நியமித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*