சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம்: 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2024) விடுத்துள்ள அறிக்கை:

சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 10.09.2024 நாளிட்டு முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு (Affiliation) வழங்க வேண்டுமென முதலமைச்சர் கடந்த 29.12.2022 அன்று கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து சிபிஎஸ்இ உடன் கலந்தாலோசித்து பரிசீலித்ததில் 127 அரசுப் பள்ளிகளுக்கு இணைப்புக் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 127 பள்ளிகளில் 126 பள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 பள்ளிக்கு முழுமையற்ற விண்ணப்பம் சமர்பித்ததால் சிபிஎஸ்இ இணைப்பு வழங்க முடியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சிபிஎஸ்இ-க்கு 10, 12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு பெற உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தோம். ஆனால், இதுவரையில் மேற்சொன்ன தேர்வுக் கட்டணம் செலுத்தியது குறித்து பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில், சிபிஎஸ்இ இணைப்புப் பெறாத அந்த 1 பள்ளி எது? அப்பள்ளியின் நிலை என்ன? இந்தாண்டு அப்பள்ளியில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியுமா? சிபிஎஸ்இ இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

கல்வித்துறையில் சிபிஎஸ்இ விவகாரங்களைக் கவனிக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் போதிய நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தால் இதுபோன்ற அவல நிலை ஏற்படுகிறது. இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட போவது மாணவர்கள்தான் என்பதைப் புதுச்சேரி அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*