சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து கல்வித்துறை உண்மைக்கு மாறான அறிக்கை: முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.09.2024) வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 10, 12ஆவது வகுப்புத் தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டுள்ளதால், இதுகுறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

சிபிஎஸ்இ 10, 12ஆவது தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கடந்த 26.09.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது செய்தியாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் சிபிஎஸ்இ 04.10.2024 அன்றைக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று 04.09.2024 நாளிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நிதித்துறையின் பட்ஜெட் அதிகாரியால் பட்ஜெட் மதிப்பீடு 26.09.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் ஒப்புதல் பெற பரிசீலனையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதாவது 04.09.2024 நாளிட்ட சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கைக் கிடைத்தவுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலதாமதமாக கடைசி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், நிதி ஒதுக்கீடு இன்னமும் செய்யவில்லை பரிசீலனையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னமும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் பெற்று தேர்வுக் கட்டணம் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேலும், அந்த அறிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அவலங்களையும் செயலற்ற போக்கையும் செய்தியாக வெளியிட்டால், அதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகியின் செயலாகும். அதைவிடுத்து உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பத்திரிகைகளை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. மேலும், இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

எனவே, இது குறித்து முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*