சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை: உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.09.2024) விடுத்துள்ள அறிக்கை:

கல்வித்துறை அலட்சியத்தால் சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் 10ஆவது மற்றும் 12ஆவது வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு 10ஆவது மற்றும் 12ஆவது மாணவர்கள் தேர்வு விண்ணப்பத் தொகையாக கடந்த பல ஆண்டுகளாக சுமார் ரூ.235 அளவில் தமிழக அரசுக்குச் செலுத்தி வந்தது. தற்போது சி.பி.எஸ்.இ-ல் 5 பாடங்களுக்குத் தேர்வுக் கட்டணம் ரூ,1500, ஒவ்வொரு கூடுதல் பாடத்திற்கும் ரூ.300 கூடுதல் கட்டணம், செய்முறைத் தேர்வுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150, அக்டோபர் 5ஆம் தேதிக்குப்பின் ஒவ்வொரு மாணவருக்கும் தாமதக் கட்டணம் ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், பட்டியலின வகுப்பினருக்குச் சலுகைக் கட்டணம் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ.1200 என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது புதுச்சேரி அரசு, ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கும் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ இணைப்பு முழுவதற்கும் பொறுப்பில் உள்ள கல்வித்துறை இணை இயக்குநர் சி.பி.எஸ்.இ-ல் வரும் 2025-இல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கமாக அரசு செலுத்தும் தேர்வுக் கட்டணம் குறித்து எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை. தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி நாள் 04.10.2024 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் தப்பும் தவறுமான கோப்புகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார். இரண்டு கோடி ரூபாய்களுக்கு மேல் சம்பந்தப்பட்ட கோப்பு அரசு செயலர், தலைமைச் செயலர் போன்றவர்கள்தான் முன் வைக்க முடியும். இதை அறியாமல் தனக்கு அதிகாரம் இல்லை என்றுகூட தெரியாமல் கோப்பில் கையெழுத்திட்டு ஒப்புதல் பெற மேலும் காலதாமதத்திற்கு வழி வகுத்துள்ளார்.

சி.பி.எஸ்.இ பிரிவுக்கு போதிய அனுபவமுள்ள பள்ளி முதல்வர்கள் இருந்தும், எந்த அனுபவமும் இல்லாத இரண்டு மூன்று ஆசிரியர்களைத் துறையிலேயே தன் கீழ் வைத்துக் கொண்டு இணை இயக்குநர் செயல்பட்டு வருகிறார். இதனால் இன்று 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயத்தில் பெரும் கவனக் குறைவுடன் நடந்து கொண்டதுடன், புதுச்சேரி அரசையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளார்.

எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை செயலர் ஆகியோர் இதில் தலையிட்டு தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 04.10.2024 என்பதால், போதிய நிதி ஒதுக்கீடு செய்து தேர்வுக் கட்டணம் செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் தேர்வு எழுத ஆவன செய்ய வேண்டும்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மாணவர்களின் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் அலட்சியமாக இருந்த கல்வித்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*